Saturday, May 8, 2010

சுதந்திரம்

மேடையிலொருவன் பொய்குரைப்பான்
தாவி மேடையேறித்
தலையிற்குட்ட முடியவில்லை

சூரிய நிலாக்களாய்க்
கண்ணுக்கழகிய பெண்கள்
கடந்தேகும் போதெல்லாம்
அழகி நீங்களென
வாயாரச் சொல்ல வலிமையில்லை

தண்ணீரே எண்ணெயாய்த்
தாமரைகள் விளக்கெரிக்கும்
குளம்கண்டால்
ஓருடையும் களையாமல் ஓடிக்குதித்து
நீர் குடைந்தாட நேரமில்லை

நீண்டுகிடக்கும் நெடுஞ்சாலையில்
வேப்பமரம் விரித்த நிழற்பாயில்
துண்டு தலைக்கு வைத்துத்
துயில் கொள்ள இயலவில்லை
நீர்வழிப்படூஉம் புணைபோல் நானும்
நதிவழிப்பாட்டுக் கடலடையக்கூடவில்லை

ரயிலில் வரும் சில வியாபாரிகள்
எட்டுக்கட்டையில் இலக்கியம் பேசுகையில்
அபாயச்சங்கிலி பிடித்திழுக்கும்
ஆண்மையின்னும் கூடவில்லை

கடன்கேட்கப் போனவீட்டில்
உப்புக்கரிக்கும் உணவைத்
துப்பித் தொலைக்கத் துணிவில்லை

சிலரது மரணத்தை
தேசிய லாபமென்று
அறிக்கையிடத் திராணியில்லை

முதலமைச்சர் வேலைகோரி
முதலமைச்சருக்கே சொல்லச்சொல்லும்
மூடப்பரிந்துரை மூட்டைகளை
முகத்தில் விசிறியடிக்க முடியவில்லை


தேசியகீதம் இசைக்கும் நேரம்
பிளிறும்-கனைக்கும்-பேசும்-நகரும் பிராணிகளை
வண்டலூர் அனுப்ப வசதியில்லை

இனிப்பு-ஊறுகாய்-நெய்யெல்லாம்
மூக்கோடு முடிகின்றன
நாற்பது வயதானால் நாவுக்கு உரிமையில்லை

எண்ணெய்க்குளியலின் பிற்பகல் தூக்கத்தை
வைத்தியர் சட்டம் வழங்கவில்லை

எழுத மை வேண்டும்
வானத்தின் நீலத்தில்
சில குடங்கள் கேட்டேன்
மசியவில்லை

வான்குடைய வேண்டும்
சிட்டுக் குருவிகளின் சிறகுகளைக்
கடன் கேட்டேன்

தரமாட்டான் மனிதனென்று தரவில்லை

கற்றை மேகமாய்க் காடுகடக்க
ஒற்றைத் தேன்துளியாய்ப் பூவுள்உருள
நீண்ட கனவு... நிறைவேறவில்லை

குறைந்தபட்சம்
ஞாயிறு மட்டுமேனும்
எட்டுமணித் தூக்கம் இயலவில்லை

பழைய பெரியவரே
பாலகங்கா�ர திலக்!
சுதந்திரம் எனது பிறப்புரிமையென்பது
சும்மா.

   * * * * *

0 comments:

Post a Comment

 
Latest Tamil Songs Download. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.